அமித் ஷா தன் மகனுக்கு பக்கோடா தொழிலை சொல்லிக் கொடுக்கட்டும் - குஷ்பூ காட்டம்

அமித்ஷா பக்கோடா விற்பது நல்ல தொழில் எனக் கூறியிருக்கிறார். முதலில் அத்தொழிலை அவர் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் பொது கூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய குஷ்பூ, "பேருந்து கட்டண உயர்வால் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். தோல்வி பயத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு சந்திக்கத் தயங்குகிறது. ஜிஎஸ்டியால் கரூரில் கொசுவலை, ஜவுளி உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் அங்கு காலூன்றுவோம் என பாஜக கூறுவது எப்படி சாத்தியம்?. ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு கொள்கையால் எல்லையில் தீவிரவாதம் இருக்காது என்றார் மோடி. ஆனால் எல்லையில் எத்தனையோ ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம்.

60 ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் மயமாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறியிருக்கிறது என்றால் அது காங்கிரஸால்தான், பாஜகவால் அல்ல. அமித்ஷா பக்கோடா விற்பது நல்ல தொழில் எனக் கூறியிருக்கிறார். முதலில் அத்தொழிலை அவர் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கட்டும்.

சட்டசபையில் ஜெயலலிதா புகைப்படம் திறந்தது சட்டப்படி தவறானது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார். ஜெயலலிதா படத்திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கி அரசியலில் முதலில் ஈடுபடட்டும். அதன்பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>