அமெரிக்காவில் பயங்கரம் திருவிழாவில் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டு தள்ளினார்: 3 பேர் சாவு, 12 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பூண்டுத் திருவிழாவில் புகுந்த மர்மநபர், கண்ணுக்கு தெரிந்தவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் சான்பிரான்சிஸ்கோவுக்கு தென் கிழக்கே 176 கி.மீ. தூரத்தில் உள்ள கில்ராய் நகரம். இப்பகுதியில் அதிக அளவில் பூண்டு விளைவதால், ‘உலகின் பூண்டு தலைநகர்’ என்று சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் இங்கு பூண்டு திருவிழா நடத்தப்படும். அதில், பூண்டு ஐஸ்கிரீம் உள்பட வித்தியாசமான பூண்டு உணவு வகைகள் தயாரிக்கும் போட்டிகள் இடம்பெறும்.

இந்நிலையில், ஜூலை 28ம் தேதி ஞாயிறன்று இந்த ஆண்டு பூண்டு திருவிழா நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது திடீரென ஒரு மர்மநபர், மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் இருந்த ரேயாஸ் என்ற பெண் கூறுகையில், ‘‘துப்பாக்கிச் சூடு சத்தம், வெடிச்சத்தம் போன்று கேட்டது. அதனால் யாரோ வெடி வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். அதன்பிறகு ஒருவன் துப்பாக்கியால் சுடுவதை பார்த்ததும் அலறி ஓடினேன். மக்கள் கையில் கிடைத்த பொருட்களை அவன் மீது தூக்கி எறிந்து விட்டு ஓடினர். உயிருக்கு பயந்து எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அதனால், ஒரே கூச்சலும், குழப்பமுமாக காணப்பட்டது’’ என்றார்.

நட்டாலி மார்ட்டின்ஸ் கூறுகையில், ‘‘நான் எனது இரண்டு குழந்தைகளை தேடி அந்த இடத்திற்கு ஓடிேனன். எல்ேலாரும் கூக்குரலிட்டபடி ஆளுக்கொரு திசையில் ஓடினர். அதனால் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை’’ என்றார்.

அமெரிக்க போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவம் பற்றி அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘அந்த இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். இன்னும் அந்த மர்ம நபர் பிடிபடவில்லை. மக்கள் உஷாராக இருக்க வேண்டும்’’ என்று ட்விட் போட்டார்.

பரிதாப தோற்றத்தில் முகிலன்... இத்தனை நாள் எங்கிருந்தார்..! உண்மை வெளிவருமா

More News >>