கர்நாடக புதிய சபாநாயகர் யார்..? பாஜகவின் போப்பையா போட்டியின்றி தேர்வாகிறார்

கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கே.ஜி.போப்பையா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தால் குமாரசாமி தலைமையிலான 14 மாத கால காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜகவின் எடியூரப்பா முதல்வரானார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடியூரப்பா குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் ரமேஷ்குமாரும் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக வசம் ஆட்சி கைமாறியதால் சபாநாயகரை பதவியை விட்டு கீழிறக்க ரமேஷ்குமாரே முந்திக் கொண்டு ராஜினாமா செய்து விட்டார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீடித்த அரசியல் நெருக்கடிகளில் சிக்கி தூக்கத்தை தொலைத்தது போதும். இப்போது விடுதலை கிடைத்தது நிம்மதி என்று கூறி ரமேஷ்குமார் பதவியை துறந்தார்.

இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய நாளை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று நடைபெறுகிறது. பாஜக சார்பில் மூத்த உறுப்பினரான கே.ஜி. போப்பையா நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது. இவர் ஏற்கனவே 2008-ல் எடியூரப்பா முதல்வராக இருந்த போது சபாநாயகராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அநேகமாக சபாநாயகர் பதவிக்கு, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் வேட்பாளர் யாரும் முன்னிறுத்தப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் போப்பையா போட்டியின்றி தேர்வானதாக இன்றே அறிவிப்பு வெளியாகலாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி; சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ்குமார்

More News >>