பதவி விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர் தேர்தலில் போட்டியிட சீட் உறுதி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை பலமிழக்கச் செய்ய வேண்டுமென்று பாஜக-சிவசேனா கூட்டணி முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. ஏனெனில், அங்கு ஆளும்கூட்டணி மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காங்கிரசை சேர்ந்த ராதாகிருஷ்ண பாட்டீல், கடந்த மாதம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதேபோல், தேசியவாத காங்கிரசை சேர்ந்த பீட் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர், சகாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டுரங் வரோரா ஆகியோரும் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சிவசேனாவில் இணைந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சச்சின் அஹிரும் சிவசேனாவில் சேர்ந்தார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவேந்திர ராஜே போஸ்லே, சந்தீப் நாயக், சித்ராவாக் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதார் கோல்ம்கரும் நேற்று சபாநாயகரை சந்தித்து பதவியை ராஜினமா செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது ஆனால், கட்சி மாறி போட்டியிட்டால் மக்கள் எப்படி ஏற்பார்கள் என்பதுதான் தெரியவில்லை.

அதிமுகவுக்கு கவுரவப் பிரச்னை; வேலூரில் வெற்றி பெறுமா திமுக?

More News >>