அத்திவரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சி ஓ.பி.எஸ். தரிசனம் செய்தார்

சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரிசித்தார். நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், இம்மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல் காவலர்களும், ஊழியர்களும் திணறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வரிசையில் காத்திருந்தவர்களில் பலர் மயக்கமடைந்தனர். அவர்களில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் பின்னர், அரசு தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள் வருவதை தவிர்க்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். அதன்பின்பும், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு செல்கி்ன்றனர்.

இதுவரை சயனக் கோலத்தில் தரிசனம் அளித்த அத்திவரதர், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதால், மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசிக்க முடியாது. இதனால், மதியம் ஒரு மணி வரை வரிசையி்ல் நின்றவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாளான இன்று, அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி மலர் அலங்காரத்தில் காட்சி கொடுத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் காஞ்சிபுரம் வந்து, அத்திவரதரை தரிசித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் சிலரும் வந்து தரிசித்தனர்.

'அத்திவரதர் தரிசனத்தில் தடபுடல் மரியாதை' மதுரை ரவுடிக்கு 'ஆல் இன் ஆல்' ஏற்பாடு திமுக புள்ளிகளாம்

More News >>