தூத்துக்குடிக்கு ரகசியமாக தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீண்டும் அந்நாட்டு வசம் ஒப்படைப்பு

சரக்குக் கப்பலில் சட்டவிரோதமாக தப்பி வந்து தூத்துக்குடியில் பிடிபட்டர் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீண்டும் அந்நாட்டு வசம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்த சரக்கு கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக ஏறி வந்தார். அவர் கப்பலில் தப்பி வருவது பற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு கப்பலின் நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இழுவைக் கப்பல் தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் வந்தபோது, இந்திய கடலோர காவல்படையினர் அந்த வழிமறித்தனர். அதில் இருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்பிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தக் கப்பலை தூத்துக்குடி துறைமுகத்துக்கு வெகு தொலைவில் நிறுத்தப்பட்டது.அகமது ஆதிப்பும் கப்பலுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டார். மத்திய உளவுத்துறைதுறை அதிகாரிகளும் அகமது ஆதீப்பிடம் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

அகமது ஆதீப்பிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, அவரை மீண்டும் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பும் முடிவை மத்திய அரசு அதிகாரிகள் எடுத்தனர். இதையடுத்து அகமது ஆதீப் வந்த சரக்கு கப்பலிலேயே அவரை சர்வதேச எல்லை வரை கொண்டு சென்றனர். அங்கு மாலத்தீவு கப்பற்படையினர் வசம், இந்திய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மாலத்தீவில் 2015-ல் ஆணை அதிபராக இருந்த அகமது ஆதீப், அப்போது அதிபராக இருந்த யாமீனை கொலை செய்ய சதி செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்ப்பட ஆதீப், தற்போது வீட்டுச் சிறையில் இருந்து வந்தார். அங்கிருந்து ரகசியமாக இந்தியாவுக்கு தப்பி வந்து, பிரிட்டனில் அடைக்கலம் தேட முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் தான் தூத்துக்குடி அருகே இந்தியப் படைவசம் பிடிபட்டு மீண்டும் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

More News >>