ஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் ..! காஷ்மீரில் உச்சகட்ட பீதி பிரதமர் மோடி அவசர ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவையும் இன்று காலை கூடி விவாதித்ததால், காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் எப்போதும் இல்லாத வகையில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் ராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பதற்றத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜம்முவின் துணை ஆணையாளர் சுஷ்மா சவுகான் நள்ளிரவில் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அளிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்முவில் மொபைல் இன்டர்நெட் சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து கூடுதல் படைகள் குவிக்கப்பட்ட சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதே போன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சி தலைவர் உஸ்மன் மஜித் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ எம்.ஒய். தாரிகாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஆகியவற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் காஷ்மீரில் மக்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி, ஒருவித பீதியில் உறைந்துள்ளனர்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காஷ்மீரில் படைகளை குவித்தும் ,ஊரடங்கு, 144 தடை, தலைவர்கள் கைது, வீட்டுச் சிறை வைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் எம்.பி. ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடியின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இதில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்க முக்கிய முடிவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.இந்த முடிவு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதால், காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் ஊடுருவ முயன்று கொல்லப்பட்ட 7 பாக்.வீரர்கள்; சடலங்களை எடுத்துச் செல்ல இந்தியா அனுமதி

More News >>