பிரிவு 370 நீக்கம் எதிரொலி காஷ்மீரில் ஊரடங்கு அமல் ஸ்ரீநகரில் ராணுவம் குவிப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீநகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது. மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஸ்ரீநகர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் ராணுவப் படைகள் ஆங்காங்கே நிறத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பக்சிங் கூறுகையில், கடந்த 24 மணிநேரத்தில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். பிரிவு 370 நீக்கப்பட்ட பின்பு, முதல் நாளிலேயே அமைதி நிலவுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

காஷ்மீர் விசேஷ அந்தஸ்து ரத்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்; உமர் அப்துல்லா எச்சரிக்கை
More News >>