கர்நாடகா கன மழை - காவிரியில் 1.5 லட்சம் கனஅடி திறப்பு மேட்டூர் கிடுகிடு உயர்வு

கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தென் மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிதீவிரமாகி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வரலாறு காணாத மழை கொட்டித் தீர்க்கிறது. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களான கேரளா முதல் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி, கோவா என உத்தரகாண்ட் வரை கனமழை கொட்டித் தீர்க்கிறது. அதிலும் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் இந்த மழையால் பெரும் வெள்ளக்காடாக பெருத்த சீரழிவை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் கர்நாடகா, மற்றும் கேரளாவின் பெரும் பகுதி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இன்னும் மக்களை அச்சப்படச் செய்யும் அளவுக்கு கன மழை கொட்டி வருகிறது. கர்நாடகாவின் பல நகரங்களும், கிராமங்களும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள நிலையில், மலைப்பாங்கான கேரளாவிலோ நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் புதையுண்டு கிடக்கின்றனர். இதனால் பலர் மாண்டு போனாலும் பலி எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சில கிராமங்களே புதையுண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு மாநில அரசுகளும் திணறிப் போய், மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை உதவிக்கு அழைத்துள்ளன.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இன்று காலை நிலவரப்படி 1.5 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறப்பு நீர் இன்னும் மேட்டூர் அணைக்கு வந்து சேராத நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்துள்ளது.

தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 25 ஆயிரம் கனஅடியில் இருந்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.16 அடியாக உள்ள நிலையில், தற்போது ஒகேனக்கலுக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மேலும் கர்நாடக அணைகளில் இருந்து இன்று திறக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் கன அடி நீரும் சீறிப் பாய்ந்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் அடுத்தடுத்த நாட்களில் கிடு கிடுவென உயர வாய்ப்புள்ளது. இதே நிலை நீடித்தால் ஒரே வாரத்தில் அணை நிரம்பவும் வாய்ப்புள்ளதால், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதிகளிலும், கரையோர பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து விடவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆகஸ்ட் 15-ந் தேதி அணை திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் பருவமழை தீவிரம்; குற்றாலத்தில் களைகட்டிய சீசன்

More News >>