விமானம் வேண்டாம் அனுமதி மட்டும் கொடுங்கள் : காஷ்மீர் ஆளுநரின் சவாலுக்கு ராகுல்காந்தி பதிலடி

காஷ்மீர் நிலைமை பற்றி தவறாக பேசி வரும் ராகுல் காந்தி உண்மை நிலையை நேரில் கண்டறிய வரத் தயாரா? தனி விமானம் ஏற்பாடு செய்கிறேன் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்றுள்ள ராகுல், தனி விமானம் எல்லாம் வேண்டாம். அங்குள்ள மக்களையும், படை வீரர்களையும் சுதந்திரமாக சந்தித்துப் பேச அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் வரத் தயார் என்று பதிலத்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநில அந்தஸ்தை பறித்து இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது போன்ற அதிரடி முடிவுகளை மத்திய அரசு கடந்த வாரம் எடுத்தது.இந்த முடிவு எடுப்பதற்கு முன்னரே காஷ்மீரில் ராணுவத்தை குவித்தது மத்திய அரசு . அம்மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி.ராஜா, யெச்சூரி உள்ளிட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதே வெளி உலகுக்கு தெரியவில்லை. அங்கு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில்,ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு,இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. பக்ரீத் பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் சந்தைகளில் பொருட்களை வாங்கிச் சென்றனர். காஷ்மீர் முழுவதும் பக்ரீத் மிகவும் அமைதியாக கொண்டாடப் பட்டது.

காஷ்மீர் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் எதிர்மறையான கருத்துகளை கூறி வருகிறார்.காஷ்மீரில் சிறு அசம்பாவிதங்கள் கூட நடைபெறவில்லை. ஒருவர் கூட காயமடையவில்லை.

ராகுலுக்காக நாங்கள் சிறப்பு விமானத்தை அனுப்ப தயாராக உள்ளோம்.அவர் காஷ்மீருக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிடலாம். அங்குள்ளவர்களிடம் தாராளமாக பேசலாம். காஷ்மீருக்கு வருவதற்கு ராகுல் தயாரா? என ஆளுநர் சத்யபால் மாலிக் ராகுலுக்கு சவால் விடுத்திருந்தார்.

இதற்கு ராகுல் காந்தி டிவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அதில், உங்கள் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவினருடன் காஷ்மீர் வரத் தயார். சிறப்பு விமானம் தேவையில்லை. காஷ்மீருக்குள் சுதந்திரமாக செல்ல முதலில் அனுமதி கொடுங்கள். அங்குள்ள மக்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும், நமது படை வீரர்களையும் சுதந்திரமாக சந்தித்துப் பேசவும் அனுமதி கொடுத்தால் மட்டும் போதும் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்காவுக்கு வேலையில்லை; இந்திய தூதர் அறிவிப்பு

More News >>