அத்திவரதர் தரிசனத்திற்கான நாட்களை நீட்டிக்க முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை, கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டுமென்று ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சென்னை பெரம்பூரை சேர்ந்த வசந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 1937ம் ஆண்டு குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை 40 நாட்கள் பூஜை செய்யப்பட்டு மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் 42 ஆண்டுகளுக்கு பின்பு, 1979ல் மீண்டும் சிலை எடுக்கப்பட்டு, அத்திவரதர் தரிசன விழா நடந்தது. அப்போது 13 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் 40 நாட்களில் இருந்து 48 நாட்களாக தரிசனம் நீட்டிக்கப்பட்டது. எனவே, தரிசன நாட்களை நீட்டிப்பதால் எந்த ஆகமவிதிகளும் மீறப்படுவதாகாது.

தற்போது தினமும் 5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, தரிசன நாட்களை நீட்டிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

இதே போல் வி.கிருஷ்ணசாமி என்பவரும் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்ற தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதன் முடிவில், ‘‘மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’’ என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காதலர் விக்னேஷ் சிவனுடன் அத்திவரதரை தரிசித்த நயன்தாரா

More News >>