வி.பி. சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் ராகுல் டிராவிட் நேரில் அஞ்சலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் மறைவுக்கு முன்னாள், இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகுல் டிராவிட் மற்றும் தமிழக வீரர்கள் பலர் நேரிலும் அஞ்சலி செலுத்தினர்.

வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணியை தனி ஆளாக நடத்தி, கடன் பிரச்சினையில் சிக்கியதே அவரது தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சந்திரசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், விவிஎஸ் லட்சுமணன், அனில் கும்ப்ளே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது டுவிட்டர் பக்கத்தில், வி.பி.சந்திரசேகரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் என பதிவிட்டுள்ளது.

வி.பி. சந்திரசேகர் உடலுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள் பயிற்சியாளர்கள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More News >>