தங்கம் விலை தொடர்ந்து உயர்வு சவரன் ரூ.28,856

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது. சென்னை சந்தையில் சவரன் ரூ.28,856க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று சவரன் ரூ.27,064க்கு விற்றது.

இதன்பின், ஒரு வாரத்தில் தங்கம் விலை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரி்த்தது. கடந்த 7ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.568 அதிகரித்து, சவரன் விலை ரூ.28,352க்கு விற்றது. கடைசியாக, நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3618க்கும், சவரன் விலை ரூ.28,944க்கும் விற்றது. நேற்று காலையில் ஒரு கிராம் ரூ.3612க்கும், சவரன் ரூ.28,896க்கும் விற்பனையானது. மாலையில் சவரனுக்கு ரூ.232 வரை விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.3583க்கும், சவரன் ரூ.28664க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னை சந்தையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.3607க்கும், சவரன் விலை ரூ.28,856க்கு விற்பனையாகிறது. அதாவது, சவரனுக்கு ரூ.192 விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச் சந்தையில் தங்கம் விலை நிலவரம் எப்படி மாறுகிறதோ, அதற்கேற்ப இங்கும் விலை உயர்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு, பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப தங்கம் விலை உயர்கிறது. மேலும், தங்கம் இறக்குமதி மீதான சுங்கவரியை 10ல் இருந்து 12.5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியிருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இன்னும் கூட விலை உயர வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர்.

சென்னை சந்தையில் வெள்ளி கிராம் ரூ.47.90க்கு விற்கிறது.

தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1872 உயர்வு

More News >>