சுவர் ஏறிக்குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

24 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரத்தை வலை வீசி தேடி வந்த சிபிஐ, ஒரு வழியாக அவரை கைது செய்துள்ளது. வீட்டின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக அவரை தங்கள் கஷ்டடியில் எடுக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் உச்ச நீதிமன்றத்திலும் உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையே ப.சிதம்பரத்தை கைது செய்து விடத் துடித்த சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு 4 முறை சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. இதனால் 2 மணி நேரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அவருடைய வீட்டுக் கதவில் நோட்டீசும் ஒட்டினர். 24 மணி நேரத்திற்கும் மேலாக ப.சிதம்பரம் வெளியில் தலை காட்டாததால், அவர் எங்கிருக்கிறார் என்பதே மர்மமாக இருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ப.சிதம்பரம் வந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், தாம் எங்கும் ஓடிவிடவில்லை. தம் மீது தவறு ஏதுமில்லை.ஐஎன்எக்ஸ் வழக்கில் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமே இல்லை. முதல் தகவல் அறிக்கையிலும் தங்கள் பெயர் இல்லை. சட்டத்தை மதிப்பவன் நான்.

இந்த வழக்கை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் எனக் கூறி விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்திக்கும் தகவலறிந்து சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். ஆனால் காங்கிரஸ் அலுவலகத்துக்குள் செல்லாமல் வெளியில் காத்திருந்த அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு கிளம்பியவுடன் அவரை பின்தொடர்ந்தனர். ப.சிதம்பரம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வீட்டின் கேட் கதவுகள் மூடப்பட்டது. பின் தொடர்ந்த சிபிஐ அதிகாரிகளுக்கு கேட் திறக்காததால், சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

இரவு முழுவதும் சிபிஐ அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரத்திடம் விடிய, விடிய விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இன்று அவரை டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் சிபிஐ தரப்பு, அவரை 7 நாட்கள் வரை தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன?

More News >>