காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக சார்பில் டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, அதற்கான மசோதாவை ப நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் நிறைவேற்றியது.

மத்திய அரசின் இந்த அதிரடி முடிவுகள் ல் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவும் என கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதும் பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், வீட்டுக்காவலில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் திமுக சார்பில் எம்.பி.க்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோருட்ன் காங்கிரஸ் எம்.பி.க்களும் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு; அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு

More News >>