அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாப பலி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: புணரமைப்பு பணி நடந்து வந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சர்ஜாபுரா முக்கிய சாலை, கசவனஹள்ளி ஒன்ற பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இதன் அருகிலேயே 4 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ரபீக் என்பவர், இதனை தனியார் தங்கும் விடுதியாக பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், இந்த கட்டிடத்தை வணிக வளாகமாக மாற்ற உரிமையாளர் ரபீக் முடிவு செய்தார். இதனால், கடந்த 6 மாதங்களாக அடுக்குமாடி கட்டிடத்தை வணிக வளாகமாக மாற்றி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.மேலும், கடந்த இரண்டு நாட்களாக கட்டிடத்திற்கு வர்ணம் பூசுதல், சிறிய அளவிலான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது நேற்று மாலை 4 மணியளவில் திடீரென அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளம் இடிந்து விழுந்தது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக்குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர், இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதில், மூன்று பேரை சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், 7 தொழிளார்களை பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் சிக்கி இருக்கும் 10 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கட்டிடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>