ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவலை 30-ந் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்திலும் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதில் தாமதமானதால் கடந்த புதன்கிழமை இரவு அவர் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரத்தை அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 4 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்திற்கு மேலும் 5 நாள்காவல் நீட்டிப்பு கேட்டு சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ தரப்பில் காரணம் கூறப்பட்டது. ஆனால் காவலை நீட்டிக்க வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் 4 நாட்கள் காவலில் ப.சிதம்பரத்திடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விளக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி, இதுவரை நடந்த விசாரணை விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அமலாக்கத்துறை சில தகவல்களை கொடுத்துள்ளதால் அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது எனக் கூறி சிபிஐ தரப்பில் சில ஆவணங்கள் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எதோ ஒரு சில துண்டு சீட்டுகளை காட்டி விட்டு ஆதாரம் என்கிறார்கள், உண்மையான ஆதாரம் இருந்தால் கொடுக்கலாமே? எந்த ஆதாரத்தையும் காட்டாமல் ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றால் எப்படி என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக மீண்டும் அழைத்துச் சென்றனர்.

More News >>