நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3வது நிலையை எட்டியது

சந்திரயான் 2 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையில் 3வது நிலைக்கு முன்னேறியுள்ளது. வரும் 30ம் தேதி கடைசி நிலைக்கு முன்னேறி, செப்டம்பர் 7ம் தேதி நிலவில் இறங்கும்.

புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2 ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்படும். கடந்த 21ம் தேதியன்று அடுத்த வட்டப்பாதைக்கு சந்திரயான் மாற்றப்பட்டது.

அந்த பாதையில் சுற்றிய சந்திரயான் விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மேற்பரப்பை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களுக்கு விண்வெளி விஞ்ஞானிகளின் பெயர்களை சூட்டி, அந்த பள்ளங்களின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில், சந்திரயான் விண்கலம் இன்று காலை 9 மணி 4 நிமிடத்திற்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அடுத்தாக வரும் 30ம் தேதியன்று 4வது இடத்திற்கு மாற்றப்படும். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதியன்று சந்திரயானில் இருந்து லேண்டர் விக்ரமை பிரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கும். செப்.2ம் தேதியன்று லேண்டர் விக்ரம், விண்கலத்தில் இருந்து பிரிக்கப்படும். 3, 4 தேதிகளில் லேண்டர் விக்ரம், நிலவில் இறங்குவதற்கு உரிய மேப்களை படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும். அந்த பகுதி லேண்டரின் செயல்பாடுக்கு பாதுகாப்பானதா என்று ஆராயப்படம். கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலையில் சந்திரயானில் உள்ள லேண்டர் விக்ரம், நிலவில் இறக்கப்படும்.

அதைத் தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டர் விக்ரம் தகவல்களை அனுப்பத் தொடங்கும். செப்டம்பர் 7ம் தேதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

விண்வெளி ஆய்வில் முக்கிய மைல் கல்; இஸ்ரோ தலைவர் பெருமிதம்

More News >>