ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை கவலைக்கிடம்

பீகார் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் செயலியுந்து, அவரது உடல் நிலை அபாய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வரை முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் லாலு பிரசாத் . 1977-ல் தனது 29 வயதில் மக்களவை எம்.பி. தேர்வான லாலு, 1980 முதல் பீகார் மாநில அரசியலில் கவனம் செலுத்தினார். கடந்த 1990-ல் பீகார் மாநில முதல்வராக பதவியேற்றார். இரண்டாவது முறையாக முதல்வராக இருந்தபோது கால்நடை தீவனம் வாங்கியதில் முறைகேடு செய்த விவகாரத்தில் முதல்வர் பதவி இழந்தார். இதனால் படிப்பறிவே இல்லாத தனது மனைவியை முதல்வர் நாற்காலியில் அமரச் செய்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்.

அதன் பின்னர் 1998, 2004, 2009-ம் ஆண்டுகளில் எம்.பி.யானார். 2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே அமைச்சராகி, நஷ்டத்தில் இருந்த ரயில்வேயை லாபத்தில் இயங்கச் செய்து சாதனை படைத்தார். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் 2013 -ல் இவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட, எம்.பி பதவி பறிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலைக்கும் ஆளானார்.

கடந்த 2017 முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலுவுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருடைய உடல் நிலை நேற்று முதல் மோசமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருடைய இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளும் படிப்படியாக மோசமாகி வருவதாகவும், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News >>