விக்ரம் லேண்டர் செப்.7ல் நிலவில் இறங்குகிறது : சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்று வட்டப்பாதைக்கு இன்று(செப்.4) அதிகாலை முன்னேறியுள்ளது. அது, செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக நிலவில் இறங்கும்.

நிலவின் தெற்கு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), விண்ணுக்கு அனுப்பியது. புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்பட்டது.

இதையடுத்து, நிலவில் இறங்கி ஆய்வு மேற்ெகாள்ளவிருக்கும் லேண்டர் விக்ரம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விண்கலத்தில் இருந்து பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்றுவட்டப் பாதைக்கு லேண்டர் விக்ரம், இன்று அதிகாலை 3.42 மணிக்கு மாற்றப்பட்டது. 9 வினாடிகளில் இந்த மாற்றம் நிகழ்ந்தது.

அடுத்து, நிலவில் இறங்குவதற்கு உரிய மேப்களை படம் பிடிக்கும் விக்ரம் லேண்டர், இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு அதை அனுப்பும். அந்த பகுதி லேண்டரின் செயல்பாடுக்கு பாதுகாப்பானதா என்று ஆராயப்படும். கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக லேண்டர் விக்ரம், நிலவில் இறக்கப்படும். அதைத் தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டர் விக்ரம் தகவல்களை அனுப்பத் தொடங்கும்.

ஏற்கனவே ேசாவியத் ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்துள்ளன. இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள இந்தியா, நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதில் முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, செப்டம்பர் 7ம் தேதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

More News >>