ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு : அமலாக்கப்பிரிவு கைது செய்யும்?

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கப்பிரிவினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவினர், சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. கடந்த 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் தாக்கல் செய்த மனுக்களின் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தன.

சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடுத்துள்ள ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதேபோல், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ஒரு வழக்கு தொடுத்திருந்தது. அதில் முன் ஜாமீன் கேட்டும் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் அந்த முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொருளாதாரக் குற்றங்களில் மிக அரிதாகவே முன் ஜாமீன் அளிக்கப்படும் என்றும் முன் ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, சி.பி.ஐ.யைத் தொடர்ந்து அமலாக்கப்பிரிவினரும் சிதம்பரத்தை கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, திகார் சிறைக்கு சிதம்பரம் செல்வது உறுதியாகிறது.

More News >>