கிரண் ரிஜ்ஜுவை சந்தித்து வாழ்த்து பெற்ற தங்கமங்கை இளவேனில்!

உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலககோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு அசத்தலாக துப்பாக்கி சூடு நடத்தி தங்கம் வென்று இந்தியாவின் பெருமையை பிரேசிலில் உயர்த்தினார்.   அவருக்கு உலகில் பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.   இந்நிலையில், நேற்று டெல்லி சென்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை நேரில் சென்று இளவேனில் வாழ்த்துகளை பெற்றார்.   அவருடன் மற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் குழுவாக சென்று அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.   உலக கோப்பையில் வென்றதை போன்றே ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே தனது லட்சியம் என இளவேனில் தெரிவித்துள்ளார்.
More News >>