பாக். தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுவிப்பு.. காஷ்மீர் எல்லையில் பதற்றம்

பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், பாகிஸ்தான் கடும் கோபம் கொண்டு, காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க முயன்றது. ஆனால் அது தோல்வியுற்றது. அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், ‘‘காஷ்மீர் பிரச்னையை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’’ என்று மிரட்டல் விடுத்தார். இந்தியாவுடன் போர் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். அதே போல், அந்நாட்டு ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வாவும், பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் போகும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் திடீர் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உளவுத் துறை(இன்டலிஜென்ஸ் பீரோ) தகவல் அனுப்பியுள்ளது. அதில், ‘‘பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முகமத் இயக்கத் தலைவர் மசூத் அசாரை ரகசியமாக விடுதலை செய்திருக்கிறார்கள். மேலும், எல்லையில் சியால்கோட் - ஜம்மு, ராஜஸ்தான் செக்டர்களுக்கு அருகே பாகிஸ்தான் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பெரிய தாக்குதல்களில் ஈடுபட பாகிஸ்தான் முயற்சிக்கலாம்’’ என்று எச்சரித்துள்ளது.

இதையடுத்து, காஷ்மீர் எல்லைகளில் இந்தியாவும் படைகளை அனுப்பி வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், எல்லைகளில் பதற்ற சூழல் காணப்படுகிறது.

More News >>