இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் கோப்பையை கைப்பற்றிய ஆஸி!

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒரு ஆஷஸ் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 497 ரன்கள் குவித்தனர். வெறும் 8 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்தனர். முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்களோ 301 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி 186 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. ஆனால், அந்த இலக்கை துரத்த இங்கிலாந்து வீரர்களால் இயலவில்லை. வெறும் 197 ரன்கள் எடுத்த நிலையில் சுருண்டனர். இதனால், 185 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை ஓடவிட்டு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் ஆஸ்திரேலிய அணி கோப்பையையும் கைப்பற்றியது.

More News >>