சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?

சென்னையில் பிரபல பெண் தொழிலதிபர் ரீட்டா லங்காலிங்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சென்னையில் லேன்சன் டொயட்டோ கார் டீலர் நிறுவனம் ஒன்றின் இணை நிர்வாக இயக்குனராக இருந்தவர் ரீட்டா லங்காலிங்கம்(50). அவரது கணவர் லங்காலிங்கம் முருகேசு, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். இவர்கள் நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள பங்களாவில் வசித்து வந்தனர். இவர்கள், ஆட்டோமொபைல் தவிர உணவுத் துறை வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ரீட்டாவை பார்ப்பதற்காக அவர்களின் கம்பெனியில் இருந்து ஏசுபாதம் என்ற சூபர்வைசர், இன்று காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் இருந்து 4 வேலைக்காரர்கள், காலையில் இருந்து ரீட்டா இன்னும் வெளியே வரவில்லை என்று தெரிவித்தனர். உடனடியாக, அவரது அறைக்கதவை திறந்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். அப்போது வீட்டில் லங்காலிங்கம் இல்லை. இதனால், அவருக்கும், காவல்துறைக்கும் ஏசுபாதம் தகவல் கொடுத்தார்.

உடனடியாக நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். உதவிக் கமிஷனர் முத்துவேல் பாண்டி கூறுகையில், ரீட்டா எந்த கடிதமும் எழுதி வைத்ததாக தெரியவில்லை. அவரது மரணம், தற்கொலையா என்பது குறித்து விசாரணைக்கு பின்பு தெரிய வரும் என்றார்.

சென்னையில் வேறொரு வீட்டில் வசிக்கும் ரீட்டாவின் மகனுக்கும், வெளிநாட்டில் வசிக்கும் மகளுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. மேலும், ரீட்டாவின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

More News >>