சட்ட மாணவி பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் அமைச்சர் கைது..

சட்ட மாணவியை ஓராண்டாக மிரட்டியே பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுக்தேவானந்த் சட்டக் கல்லூரி உள்ளது. வாஜ்யபாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுவாமி சின்மயானந்த், இந்த கல்லூரி சேர்மனாக உள்ளார். இந்த கல்லூரியில் எல்.எல்.எம். படித்த ஒரு பெண், கடந்த மாதம் 28ம் தேதியன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் அவர் முகத்தை மறைத்தபடி அழுது கொண்டே பேசியிருந்தார்.

தான் சுக்தேவானந்த் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்த போது, தனக்கு சின்மயானந்த் பகுதி நேர வேலை கொடுத்ததாக கூறியிருந்தார். கல்லூரியில் வேலை முடிய இரவு நேரமாகி விடும் என்பதால், கல்லூரி விடுதியில் தங்கியதாகவும், அப்போது தன்னை மிரட்டி சின்மயானந்த் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஓடி ஒளிந்து கொண்டு வருவதாக கூறி, சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்பின், உ.பி. மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், எப்.ஐ.ஆரில் சின்மயானந்த் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கு பிறகு அந்த மாணவியை ராஜஸ்தானில் கண்டுபிடித்த உ.பி. போலீசார், அவரை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, உ.பி.யில் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த மாணவி சொன்ன பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. ஆனாலும், சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்க உ.பி. பாஜக அரசு தயங்கியது.

இதற்கு பிறகு, அந்த மாணவி கடந்த 9ம் தேதியன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சின்மயானந்த் என்னை ஓராண்டாக மிரட்டி, மிரட்டியே பலாத்காரம் செய்தார். நான் உயிருக்கு பயந்து அவரை எதிர்க்க முடியாமல் தவித்தேன். இதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னை போல் பல மாணவிகள் அவருக்கு இரையாகியுள்ளனர். யாராலும் அவரைப் பற்றி வெளியில் சொல்ல முடியவில்லை. கடைசியில் நான் ஷாஜஹான்பூர் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் அதை ஏற்க மறுத்து விட்டனர். அதனால், டெல்லியில் லோதி ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால், நான் மறைந்து வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், லக்னோவில் இன்று சின்மயானந்த்தை போலீசார் கைது செய்தனர். சின்மயானந்த்தை பலாத்காரம் மற்றும் மிரட்டல் வழக்கில் காலை 9 மணி்க்கு கைது செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News >>