நல்லக்கண்ணுவை சந்தித்தது ஏன்? - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்

நான் மதிக்கும் நபர்களைச் சந்தித்துப் பேசிவருகிறேன். கட்சியைத் தாண்டி மக்களுக்கு சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வருகின்ற 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து “நாளை நமதே” என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர். ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார் என்றும் கொடி, சின்னத்தையும், தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில், மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். அதன்படி இன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துப் பேசினார். அப்போது ஹேராம் என்ற புத்தகத்தை நல்லகண்ணுக்கு அவர் பரிசளித்தார். பதிலுக்கு நல்லகண்ணுவும் கீழடி என்ற புத்தகத்தைப் பரிசளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் மதிக்கும் நபர்களைச் சந்தித்துப் பேசிவருகிறேன். கட்சியைத் தாண்டி மக்களுக்கு சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன். எனது பணி சிறக்க அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததோடு மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன்.

மக்களுக்கு சேவை செய்பவர்கள் அனைவரையும் மதிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு தலைவர்களையும் சந்திப்பேன்" என்று கூறினார்.

More News >>