ஆவி பறக்கும் அட்லிக்கு ஹாப்பி பர்த்டே!

இயக்குநர் அட்லியின் 33வது பிறந்த நாள் இன்று விஜய் ரசிகர்களால் ஹாப்பி பர்த்டே பிகில் அட்லி என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியளவில் டிரெண்டாக்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்தார். பின்னர், நடிகர் விஜய்யுடன் தெறி படத்தில் கூட்டணி வைத்து, தெறி, மெர்சல் தற்போது பிகில் என் தொடர்ந்து சிக்சர்களாக அடித்து வருகிறார்.

அட்லி மீது எப்போதுமே காப்பிகேட் என்ற ஒரு குற்றச்சாட்டு சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த சினிமாவை ஜனரஞ்சகமாக மக்களிடம் மாஸாகவும் கிளாஸாகவும் கொண்டு சேர்த்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது மட்டுமில்லாமல், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்களையும் அள்ளி வருகிறார்.

இதுவரை அட்லி இயக்கிய 3 படங்களும் மாபெரும் வசூலை தமிழ் சினிமாவில் வாரி குவித்த படங்களாகவே உள்ளன. வரும் தீபாவளிக்கு வரப்போகும் பிகில் படம் தற்போதே பிசினஸ் ரீதியாக மாபெரும் கலெக்‌ஷனை அள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் கூட படம் இயக்க அட்லிக்கு அழைப்புகள் வந்தபோதும், விஜய் அண்ணாவை தவிற வேறு யாரும் தன் மனதில் கதை எழுதும் போது வருவதில்லை என பிகில் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் அட்லி பேசியுள்ளார்.

ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்ற விஜய்யின் பேச்சில் பல அரசியல் கலந்து இருந்தாலும், சுட சுட ஆவி பறக்கும் அது இட்லி ஆனாலும் சரி, அட்லி ஆனாலும் சரி என தனது செல்ல இயக்குநருக்கும் விஜய் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி, இன்று தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநர்களில் ஷங்கருடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அது மிகையாகது.

தனது கருப்பு நிறம் குறித்த மீம்ஸ்களுக்கு, தனது உழைப்பின் வழியாகவே பதிலடி கொடுத்தும் வரும் அட்லிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

More News >>