விக்கிரவாண்டியில் திமுக.. நாங்குனேரியில் காங்கிரஸ்..

இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலி்ன் அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதே போல், கடந்த ஜூனில் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியானதுமே, ஆளும் அதிமுகவும், திமுகவும் சுறுசுறுப்பாகி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார்.

More News >>