கவுண்டமணி கூட கட்சி ஆரம்பிக்கலாம்.. ஜெயக்குமார் கிண்டல்

விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ கட்சி ஆரம்பிக்கட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார்.

கோவாவில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம், அதிமுகவுக்கு எதிரான விஜய் பேச்சு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

அதிமுக மீது கை வைத்தால்தான் பெரிய ஆளாக முடியும் என்று நினைத்து பேசுகிறார்கள். ஆனால், அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

விஜய்யோ, கவுண்டமணியோ, செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும்.

மத்திய, மாநில ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ரூ.4500 கோடி வரவேண்டியுள்ளது. தமிழகம் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More News >>