சுல்தான் படம்னா இந்து கோவிலில் எடுக்கக் கூடாதா.. கடுப்பான ட்ரீம் வாரியர்!

சுல்தான் என பெயரிடப்பட்டுள்ளதால், இந்து கோவிலில் படத்தை படமாக்க சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு ட்ரீம் வாரியர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியின் சுல்தான் படம் உருவாகி வருகிறது. ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அவரின் முதல் தமிழ் படமும் இதுதான்.

படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் உள்ள ஒரு இந்து கோவிலில் படமாக்கப்பட்டு வந்த போது, சில இந்து அமைப்பினர், திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு படத்தை எப்படி இந்து கோவிலில் படமாக்குவீர்கள் என படப்பிடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால், கோபமடைந்த ட்ரீம் வாரியர் நிறுவனம், ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்த படம் திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என்றும், படத்தை இந்து கோவிலில் எடுக்கக் கூடாது என சொல்ல எந்த அமைப்பும் சொல்லக் கூடாது என்றும், அவர்கள் பரப்பிய பொய் வதந்திகளால் இங்கு இரு பிரிவினருக்கிடையே கருத்து மோதல்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், திப்பு சுல்தான் போன்ற வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களை மதத்தின் காரணமாக அடையாளப்படுத்துவது குறித்தும் தங்களின் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளது.

போலீசாரின் பாதுகாப்போடு, தற்போது அதே இடத்தில் ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

More News >>