விவசாயிகளுக்கு ஆதரவான காப்பான் படத்திற்கு பாராட்டு.. சூர்யாவை சந்தித்த விவசாயிகள்..

காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள், நடிகர் சூர்யாவை சந்தித்தனர். காப்பான் படத்தில் விவசாயிகளின் ஒற்றுமை மற்றும் போர்க்குணத்தை சித்தரித்து காட்டி, இயற்கை விவசாயத்தை போற்றியதற்காக சூர்யாவுக்கும், படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்திற்கும் நன்றி தெரிவித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

காப்பான் படத்தில் கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வகையில் விவசாயப் பிரச்னைகளை உரக்கச் சொல்லி, கார்ப்பரேட் நிறுவனங்களால் பின்னப்படும் சதி வலைகளை அம்பலப்படுத்தியுள்ளனர். மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை விட்டுவிட்டு, இயற்கை விவசாயத்திற்காக மண்புழு வளர்த்தல், இயற்கை உரங்கள் தயாரித்தல் போன்றவற்றின் அவசியத்தை காப்பான் படம் உணர்த்துகிறது. சூர்யாவுக்கும், இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

More News >>