கர்நாடகா இடைத்தேர்தல்.. டிச.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு..தேர்தல் கமிஷன் மீது கடும் விமர்சனம்..

 

 

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போதும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருக்கு தொடர்ந்து நெருக்கடி தரப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சுயேச்சைகள் என்று 17 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதை ஏற்காத அப்போதைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ், அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்தார். மேலும், தற்போதுள்ள சட்டசபையின் பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதன்பின், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17  பேரும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை எதுவும் இல்லாததால், 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்.21ம் தேதி  இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதே சமயம்,  ஐகோர்ட்டில் உள்ள ஒரு வழக்கில் உள்ள தடை காரணமாக 2 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை.

 இதையடுத்து, இடைத்தேர்தல்களை நிறுத்த உத்தரவிடக் கோரி 17  பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய சபாநாயகர் வி.எச்.காகேரி சார்பில், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சொந்த காரணத்தால், பதவியை ராஜினாமா செய்வதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உண்டு. அதை சபாநாயகர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றார்.

 எம்.எல்.ஏ.க்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்த பழைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் சார்பில் சீனியர் வக்கீல் கபில்சிபல் ஆஜரானார். அவர் வாதாடும் போது, சபாநாயகரின் அதிகாரத்தை யாரும் வரையறை செய்யக் கூடாது. ராஜினாமா கடிதத்தை அப்படியே ஏற்பது அவரது வேலை அல்ல. 17 பேரும் ராஜினாமா கடிதம் கொடுத்ததுமே, அவர்களை பாஜக மூத்த தலைவர்களுக்கு நெருக்கமான ராஜீவ் சந்திரசேகரின் ஜெட் விமானத்தில் மும்பைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஓட்டலில் தங்கியிருக்கும் போது அவர்கள் கூட்டாகவே பேட்டியும் கொடுத்தனர். பிறகு எப்படி சொந்த காரணம் இருக்க முடியும்?  சபாநாயகர் செய்தது சரிதான். அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான ராகேஷ் திவேதி, 15 தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்.22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

இந்நிலையில், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து பல பதிவுகள் வெளியாகின. பிரபல பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்பட பலரும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்தனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பது தெரிந்தே தான் தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை அறிவித்தது. தற்போது தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறது. அதாவது, அந்த 15 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட வசதியாக தீர்ப்பு வரும் வரை தேர்தலை நிறுத்தி வைக்குமாறு பாஜக சொல்லியிருக்கிறது. அதை தேர்தல் ஆணையம் அப்படியே செய்கிறது. பாஜக கட்சியின் இன்னொரு பிரிவு தான் தேர்தல் ஆணையம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. சுதந்திர இந்தியாவில் இவ்வளவு மோசமாக தேர்தல் ஆணையத்தை எந்த தலைமை தேர்தல் ஆணையரும் நடத்தியதே இல்லை என்ற வரலாற்று முத்திரையை இப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதித்துள்ளார்.

 இந்நிலையில், தற்போது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப தேர்தல் ஆணையம், கர்நாடக இடைத்தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்துள்ளது. இதன்படி, கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

More News >>