மெக்சிகோ அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மெக்சிகோ நாட்டின் உள்துறை அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் தறையிறங்கும்போது விழுந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி மற்றும் அருகாமையில் உள்ள சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒக்சாக்கா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நவரேட்டே ஒக்சாக்கா மாநில கவர்னர் அலேஜான்ட்ரோ முரட் ஆகியோர் ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

இதில், அமைச்சர், ஒக்சாக்கா கவர்னர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் மூன்று குழந்தைகளுடன் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 16 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

More News >>