முன்னாள் தலைமை நீதிபதி 2 வீடு வாங்கிய விவகாரம்.. சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி

முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியது மற்றும் ஒரு அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டாரா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மும்பையைச் சேர்ந்த மூத்த நீதிபதி தஹில் ரமானி கடந்த ஆண்டு ஆக.12ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2020 அக்டோபரில்தான் முடிகிறது. ஆனால், அவரை மேகாலயா ஐகோர்ட்டுக்கும், அந்த ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட்டுக்கும் மாற்றம் செய்து சுப்ரீம் கோர்ட் கொலிஜியம்(மூத்த நீதிபதிகள் குழு) உத்தரவு பிறப்பித்தது.

சென்னை ஐகோர்ட் 75க்கும் அதிகமான நீதிபதிகளைக் கொண்ட மிகப் பெரிய ஐகோர்ட் என்பதுடன் ஆங்கிலேயர் ஆட்சியில் துவங்கப்பட்ட சார்ட்டர்டு ஐகோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐகோர்ட்டில் இருந்து மிகச் சிறிய ஐகோர்ட்டான மேகாலயா ஐகோர்ட்டுக்கு தன்னை மாற்றியதை நீதிபதி தஹில் ரமானி அவமானமாக கருதினார். இதை மறுபரிசீலனை செய்யக் கோரினார். அதை கொலிஜியம் ஏற்கவில்ைல. அதைத் தொடர்ந்து, அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அவரை மாற்றியதற்கு பல்வேறு காரணங்கள் சமூக ஊடகங்களில் பரவியது. குஜராத் பில்கிஸ் பனோ பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதால்தான், அவர் இப்போது மத்திய பாஜக அரசால் பழிவாங்கப்படுகிறார் என்றெல்லாம் பரவின.

இதனிடையே, நீதிபதி தஹில் ரமானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததால்தான் அவர் மாற்றப்பட்டார் என்ற செய்திகள் வெளியாகின. தற்போது டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:நீதிபதி தஹில் ரமானி, சென்னையை அடுத்துள்ள செம்மஞ்சேரியில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளார். அந்த நவீன குடியிருப்புகளுக்கு மொத்தம் ரூ.3.18 கோடி கொடுத்திருக்கிறார். அதில் ரூ.16.2 கோடியை ஹெச்.டி.எப்.சி வங்கி கடன் மூலமாகவும், மீதி ரூ.1.56 கோடியை தனக்கு தொடர்புடைய 6 வங்கிக் கணக்குகளில் இருந்து கொடுத்திருக்கிறார்.

மேலும், அவர் தமிழக அதிமுக அமைச்சர் ஒருவருக்கு மிகவும் உதவிகரமாக செயல்பட்டிருக்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. சிலை கடத்தல் வழக்குகளில் முக்கியப் புள்ளிகள் சிக்கும் நிலையில், அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி மகாதேவன் பெஞ்சை கலைத்து தலைமை நீதிபதி தஹில்ரமானி உத்தரவிட்டிருக்கிறார். எனவே, இதில் ஏதோ பின்னணி உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய உளவுத் துறை(ஐ.பி.) கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணை நடத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார் என்று டைம்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

More News >>