விக்கிரவாண்டி, நாங்குனேரியில் பணம் கொடுக்க திமுக திட்டம்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

தெலங்கானா கவர்னராக தமிழிசை சவுந்திரராஜன் பொறுப்பேற்ற பின்பு, 2வது முறையாக சென்னைக்கு வந்துள்ளார். அவருக்கு நேற்று முன் தினம் சென்னையில் தமிழ் சான்றோர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று ஆயூத பூஜையை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கொண்டாடினார். அவருக்கு பல முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இதன்பின், அங்கு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியதாவது:தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் கவர்னர் தமிழிசைக்கு வாழ்த்து கூறினேன். அவரை தெலங்கானா கவர்னராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மக்கள் செல்வாக்கோடு அதிமுக வெற்றி பெறுவது உறுதி. இந்த இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.

அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் சிங்கப்பூரில் கூட டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களும் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பதிலளித்தார்.

More News >>