கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.4 கோடி சிக்கியது.. 2வது நாளாக ஐ.டி. ரெய்டு..

கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா வீடு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 2வது நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இதில்,ரூ.4.52 கோடி கைப்பற்றப்பட்டது.

கர்நாடாகாவில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த கூட்டணியில் 17 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாகி ராஜினாமா செய்ததால், ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்வராக இருந்த பரமேஸ்வராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இ்ன்று 2வது நாளாக ரெய்டு நடத்தினர். அவருக்கு தொடர்புடைய ஸ்ரீசித்தார்த்தா உயர்கல்வி டிரஸ்ட் நடத்தும் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி, அவரது வீடு உள்பட 34 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. சித்தார்த்தா அகடமியின் வேந்தராக பரமேஸ்வரா உள்ளார்.

இன்று இரண்டாவது நாளாக நடந்த ரெய்டுகளில்், அவரது வீடு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து கணக்கில் வராத ரூ.4.52 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதே போல், காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சரான ஜாலப்பாவின் மருத்துவக் கல்லூரி கோலாரில் உள்ளது. இந்த கல்லூரி உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் இன்று 2வது நாளாக வருமான வரித் துறையினரின் ரெய்டு நடந்தது.இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட ட்விட்டில், இந்த வருமானவரித் துறை ரெய்டுகள் திட்டமிட்டு காங்கிஸ் மீது நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் ரெய்டுகள். இதற்கெல்லாம் காங்கிரஸ் அடிபணியாது என்று கூறியுள்ளார்.

More News >>