தமிழ், ஆங்கிலம், சீனமொழிகளில் ட்விட் போட்ட பிரதமர் மோடி..

சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக, சென்னை வந்து சேர்ந்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், சீன மொழிகளில் ட்விட் செய்து அசத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்க்கும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி இன்று மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக, சென்னை முதல் மாமல்லபுரம் வரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

மாமல்லபுரம் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் பிரதமரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஜி.கே.வாசன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் கோவளத்திற்கு சென்றார். அங்கிருந்து மாலையில் மாமல்லபுரம் செல்லும் பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்கிறார்.இதற்கிடையே, சென்னை வந்திறங்கியதுமே பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் ஆங்கிலம், சீன மொழிகளில் ட்விட் போட்டு அசத்தினார்.தமிழில் அவர், சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையே அவர் ஆங்கிலத்திலும், சீனமொழியிலும் பதிவிட்டிருக்கிறார்.

More News >>