இங்கிலாந்து அரசியல் தலைவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்தது ஏன்? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி..

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டசபைத் தோ்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கடந்த 2 நாட்களாக அம்மாநிலத்தில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சாங்லி, சோலாப்பூா் ஆகிய ஊர்களில் நேற்று பிரச்சாரம் செய்த அமித்ஷா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததை ராகுலும், சரத்பவாரும் எதிர்ப்பது ஏன்? இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாறியதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரிக்கும் போது, காங்கிசும், தேசியவாத காங்கிரசும் ஏன் எதிர்க்கின்றன? என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், அமித்ஷா இன்று 2வது நாளாக பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீர் விவகாரத்தில் நாம் இத்தனை ஆண்டுகளாக ஒரே கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறோம். இந்த பிரச்னையில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்பதுதான் அது. அமெரிக்க அதிபராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இந்தியாவின் உள்விவகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார்.

அதே சமயம், ராகுலுக்கு நெருக்கமானவரும், காங்கிரஸின் வெளிநாட்டுப் பிரிவு தலைவருமான கமல் தாலிவல், இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது காஷ்மீரில் சகஜ நிலை ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். நான் ராகுலிடம் கேட்பது என்னவென்றால், இந்தியாவின் விவகாரத்தை வெளிநாட்டு தலைவர்களுடன் பேசுவதன் மூலம் உங்கள் கட்சி என்ன எதிர்பார்க்கிறது? என்பதுதான்.

இவ்வாறு அமித்ஷா கேள்வி எழுப்பினார்.

More News >>