உங்க பித்தை தெளிய வைத்தே ஆகணும்.. பார்த்திபனுக்கு மூன்று மருந்து சொன்ன சேரன்..

பார்த்திபன் தனி ஒருவராக நடித்து இயக்கி தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சேரன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

"நீங்கள் (பார்த்திபன்) திரைத்துறையில் அறிமுகமாகி சரியாக 30 வருடங்கள். இன்னும் முதல் படம் போலவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் கலைஞன். பெருமிதம் கொள்கிறேன் உங்களோடு என் முதல் பயணம் துவங்கியதில்... நீங்கள் ஒத்த ஆளா கிறுக்கிய கவிதை, நீங்கள் இன்னும் சினிமா கிறுக்கனாகத்தான் இருக்கிறீர்கள் எனப் பறைசாற்றியது. இந்த பித்தை தெளியவைக்க உங்களுக்குக் கீழ்க்கண்ட மருந்துகள் கொடுக்க வேண்டும்.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது - 1, சிறந்த நடிகருக்கான தேசிய விருது - 1, காந்திபடம் போட்ட கரன்சி - 1000 மூட்டைகள் (2000 ரூபாய் நோட்டாக)இதெல்லாம் இவருக்குக் கொடுத்தால் அவரது நோய் இன்னும் பலமடங்காகி இன்னும் நல்ல கிறுக்கல்கள் வரும். ஹேட்ஸ் ஆஃப் சார். பாடல்களும் பேரிரைச்சல்களும் உதவாத சண்டைக்காட்சிகளிலுமாய் இன்னும் மூழ்கி கிடக்கும் தமிழ் சினிமா சந்தையில் ஒற்றை ஆளாய் உங்கள் மு(அ)கத்தை மட்டும் காண்பித்து இரண்டு மணி நேரம் கட்டிப்போடுவதென்பது அசாத்திய முயற்சி' என பார்த்திபனை சேரன் பாராட்டியுள்ளார்.

சேரனின் பாராட்டுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். " உள்ளங்கையால் மறைத்த உதய சூரியன் நீங்கள். ஊர் ஒதுக்கித் தள்ள, உந்தி முந்தி எப்படியாவது வெல்ல வேண்டும். நம் இருவருக்கும் பொருந்துமிது. நன்றி", என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.இயக்குனர் சேரனின் முதல் படமான பாரதி கண்ணம்மாவில் பார்த்திபன் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>