அயோத்தி வழக்கு விசாரணை.. நாளையே கடைசி நாள்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணைக்கு நாளையே கடைசி நாள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நிலத்தைப் பிரித்து எடுத்து கொள்ளும் வகையில் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

விசாரணை தொடர்ந்து 25 வது நாளாக நடைபெற்ற போது, இன்னும் எத்தனை நாட்களில் விசாரணையை முடிப்பது? என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கேள்வி எழுப்பினார். அதன்பின், வழக்கறிஞர்கள் கலந்தாலோசித்து கொடுத்த பட்டியலை தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். தொடர்ந்து, வழக்கு அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், இன்று விசாரணையின் 39வது நாள். நாளை 40வது நாள்தான் கடைசி நாளாகும். எனவே, நாளைக்குள் அனைத்து தரப்பும் வாதங்களை முடிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நவம்பர் 17ம்தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, நாளைக்குள் விசாரணை முடிந்தால்தான், அடுத்த ஒரு மாதத்திற்குள் தீர்ப்பை வெளியிட வாய்ப்பிருக்கும் என்று அவர் கருதுகிறார்.

More News >>