லலிதா ஜுவல்லரி கொள்ளையரிடம் இது வரை 25 கிலோ நகைகள் மீட்பு.. திருச்சி போலீஸ் கமிஷனர் தகவல்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன 28 கிலோ நகைகளில் இது வரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளார்.

கடந்த 2ம் தேதியன்று, திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி அமைந்துள்ள கட்டடத்தின் பின்புறச் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், லலிதா ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் கீழ் தளத்துக்கு வந்து, அங்கே இருந்த தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ நகைகள் கொள்ளை போனதாக மதிப்பிடப்பட்டது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், கொள்ளையர்கள் 2 பேர் சிறுவர்கள் அணியும் விலங்கு பொம்மைகள் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு வந்துள்ளதும், ரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளை அணிந்து கொண்டிருப்பதும் தெரிந்தன.இதன்பின்னர், திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை போலீசார் பிடித்தனர்.

அவரிடம் இருந்து சுமார் 4.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் மற்றும் அவரது அக்கா கனகவள்ளியின் மகன் சுரேஷ் ஆகியோரைப் போலீஸார் தேடிவந்தனர். இதற்கு பிறகு சுரேஷ், செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

இதையடுத்து, பெங்களூரு போலீசார் வேெறாரு வழக்கில் முருகனை கைது செய்து, அவனை திருச்சிக்கு அழைத்து வந்து கொள்ளிடம் ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த சுமார் 12 கிலோ தங்க நகைகளைப் பறிமுதல் செய்து பெங்களூரு செல்ல முயன்றனர். தகவலறிந்த போலீசார் அந்த போலீசாரிடம் பேசினர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை போன நகைகள் என்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு பிறகு, மதுரை சமயநல்லூர் மகேந்திரன், வாடிப்பட்டி கணேசன் ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மகேந்திரனிடம் 950கிராம், கணேசனிடம் 6 கிலோ, 350 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில், திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் இது வரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டு விட்டன. இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகனை காவலில் எடுத்து விசாரிக்கவிருக்கிறோம். அப்போது மீதம் உள்ள நகைகளும் மீட்கப்பட்டு விடும் என நம்புகிறோம். இந்த வழக்கில் பெங்களூரு போலீசார் எங்களுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றார்.

More News >>