ஏ.சி. அறை, வெஸ்டர்ன் டாய்லெட்.. வீட்டு உணவு கேட்ட சிதம்பரம்..

அமலாக்கத் துறை காவலில் விசாரிக்கப்படும் ப.சிதம்பரம் தனக்கு ஏ.சி. அறை, வெஸ்டர்ன் டாய்லெட், வீட்டு உணவு, மருந்துகள் போன்றவை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, அமலாக்கத் துறை வழக்கிலும் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை வரும் 24ம் தேதி, அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, சிதம்பரத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவருக்கு சிபிஐ அலுவலகம் போன்ற ஒரு நல்ல கட்டடத்தில் ஏ.சி. வசதி செய்யப்பட்ட அறை, வெஸ்டர்ன் டாய்லெட் வசதி, வீட்டு உணவு, மருந்துகள், கண்ணாடி, பாதுகாப்பு, குடும்பத்தினரை சந்திக்க அனுமதி போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்று கோரப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத் துறை காவலில் சிதம்பரத்திற்கு வீட்டு உணவு, மருந்துகள் தருவதற்கு ஒப்புக் கொண்ட போதிலும், ஏ.சி. வசதியும் தனி அறையும் தரப்படாது என்று மறுத்தார். இதன்பின், சிதம்பரத்திற்கு வீட்டு உணவு, மருந்துகள், டாய்லெட் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

More News >>