முக்கிய தருணத்தில் கமல் - மதுரையில் நாளை கட்சி கொடியேற்றம்

வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் அரசியலுக்காக மீண்டும் நிற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நாளை தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர், கொடி குறித்து அறிவிக்க உள்ள நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில் கமல்ஹாசன், “நாளை (21 ம் தேதி ) துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன்.

வருக வருக புது யுகம் படைக்க..” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த கமல், “எனது பயணத்தை தொடங்கிவிட்டேன், என் கட்சியில் உள்ளடக்கிய நபர்கள் நாளை மதுரை மாநாட்டில் பங்கேற்கிறார்கள்” என்று கூறிச் சென்றார்.

இந்நிலையில் மதுரை வந்தடைந்த அவருக்கு அவரது ரசிகர் மன்றத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய கமல், “வாழ்க்கையின் முக்கிய தருணத்தில் நிற்கிறேன். என்னை ஆசி வழங்கி திரை உலகிற்கு அனுப்பிய மதுரை மண்ணில் தற்போதும் நிற்கிறேன். எனது பயணம் நாளை காலை ராமேஸ்வரத்தில் தொடங்கி, பரமக்குடி சென்று பின்னர் மாலையில் மதுரை வருவேன்.

மதுரையில் நடைபெற்ற உள்ள பொதுக்கூட்டத்தில், கட்சி கொடி ஏற்றப்படும், கொள்கைகளில் சாராம்சம் அறிவிக்கப்படும். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார்.

More News >>