சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த ஜனவரிக்குள் புதிய விதிமுறைகள்.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்.

சமூக ஊடகங்களில் தேசவிரோதமாக கருத்துக்கள் பதிவிடுவதை தடுக்கவும், இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை தடுக்கவும் புதிய விதிமுறைகள் வரும் ஜனவரிக்குள் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புபவர்கள், தேசவிரோத கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்டுபிடிக்க வழியில்லை. அதனால், சமூக ஊடகங்களில் வரும் கருத்துக்களை இடைமறித்து அறியவும், பதிவிடுபவர்களை கண்டுபிடிக்கவும் புதிய விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், சமூக ஊடக கணக்குகளில் ஆதார் இணைக்க வேண்டுமென்றும் விதிமுறை கொண்டு வரப்படவுள்ளது.

இதன்மூலம், ஒருவரின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் சென்னை, மும்பை, மத்தியப் பிரதேச ஐகோர்ட்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுவதற்கு நீதிபதிகள் தீபக்குப்தா, அனுராதா போஸ் ஆகியோர் உத்தரவிட்டனர்.வாட்ஸ் அப், பேஸ்புக் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடும் போது, தனிப்பட்ட முறையில் குறியீட்டுக்குள் பரிமாறப்படும் தரவுகளை சேகரிக்க வழியில்லை என்ற கூறினார். இதற்கு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்படியானால் அந்த வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது என்று வாதாடினார்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, சமூக ஊடகங்களில் ே்தசவிரோதமாக தரவுகளை இடைமறித்து கண்காணிக்க மத்திய அரசுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69-ல் அதிகாரம் உள்ளது. ஆதாரை இணைப்பதால் எந்த வகையிலும் தனிமனித தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படாது. சமூக ஊடகங்களுக்கான விதிமுறைகளை வகுக்க இன்னும் 3 மாதங்கள் தேவை. ஜனவரிக்குள் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அமல்படுத்தப்படும் என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே, இன்று(அக்.23) சமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார், பான் நம்பர் உள்ளிட்ட அடையாள எண்ணை இணைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

More News >>