பாஜகவிடம் இருந்த பிடியை மக்கள் எடுத்து கொண்டார்கள்.. ப.சிதம்பரம் ட்விட்

பாஜகவிடம் இருந்த பிடியை (கன்ட்ரோல்) மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டு விட்டாலும், அமலாக்கத் துறை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனு நவம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ப.சிதம்பரம் சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டரில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து ட்விட் போட்டு வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிரா, அரியானா சட்டசபைத் தேர்தல்களில் பாஜக கடந்த முறையை விட குறைந்த எண்ணிக்கையில்தான் வென்றிருக்கிறது. அரியானாவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு மெஜாரிட்டியே கிடைக்கவில்லை. அதே சமயம், காங்கிரஸ் கூட்டணி 2 மாநிலங்களிலும் சரியாக பிரச்சாரம் செய்யாவிட்டாலும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

இது பற்றி ப.சிதம்பரம் ட்விட்டரில் போட்டுள்ள பதிவு வருமாறு:

பாஜக அரசு ஒட்டுமொத்த மக்களையும், அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க தீர்மானித்திருந்தது. ஆனால், பாஜகவிடம் இருந்து அந்த கட்டுப்பாட்டை மக்கள் திருப்பி எடுத்து கொண்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அடுத்து, அமைப்புகளும் தங்களது சுதந்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. அவர்கள், மக்களை தோற்கச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார். அவர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது.

More News >>