சென்னை அண்ணாநகர் டவரில் கத்தியால் குத்திக்கொண்ட காதலர்களால் பரபரப்பு

சென்னை: அண்ணா நகர் டவரில் காதலர்கள் திடீரென கத்தியால் குத்திக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ளது அண்ணா டவர் பூங்கா. இங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வார்கள். குறிப்பாக, காதலர்களுக்கு ஏற்ற இடமாகவும் இந்த பூங்கா மாறி உள்ளது.

விடுமுறை நாட்களில் இங்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவரின் மீது ஏறி வாலிபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அது முதல், டவர் மீது ஏற பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை பூங்காவிற்குள்ளேயே அசம்பாவிதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று, காதலர்கள் இருவர் டவருக்கு வந்துள்ளனர். அங்கு, இருவரும் பேசிக் கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது பின்னர் சண்டையாக மாறியுள்ளது.

அப்போது, கோபத்தில் காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியைக் குத்தினான். இதில், காதலிக்கு ரத்தம் வழிந்தது. இந்நிலையில், அதே கத்தியை எடுத்த காதலி காதலன் மீது குத்தினாள். இதனால், இருவருமே பலத்த காயம் அடைந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பார்வையாளர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, இருவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>