அரசு கவனமாக இருந்திருந்தால் சுஜித்தை உயிருடன் மீட்டிருக்கலாம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டான். பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடுக்காட்டுப்பட்டியில் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், திருச்சி சிவா, ஜோதிமணி ஆகியோரும் சென்றனர்.

சுஜித்தின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாமேரி ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:

குழந்தை சுஜித் 36 அடி ஆழத்தில் இருந்த போதே, பேரிடர் மீட்பு படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். கவனமாக செயல்பட்டிருந்தால் குழந்தையை உயிருடன் மீட்டிருக்க முடியும். மீட்பு பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்க்க வேண்டும். குழந்தையை மீட்க ஏன் ராணுவ உதவியைப் பெறவில்லை? பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்புப் பணியில் காட்டவில்லையோ என்ற ஆதங்கம் உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

More News >>