ஒரே ஒரு கேட்சுக்காக ரூ.23 லட்சம் அள்ளிய கிரிக்கெட் ரசிகர்!

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரசிகர் ஒருவர் பிடித்த கேட்சுக்கு ரூ.23 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

நியூசிலாந்து நாட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20தொடர் நடைபெற்று வருகிறது.

திங்களன்று நடைபெற்ற லீக் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து எதிர்பாராத விதமாக 2 ரன்னில் வெற்றியை கோட்டையை விட்டது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் மலன் அடித்த சிக்ஸர் பந்தை ரூடி போஸ்மன் என்ற ரசிகர் அழகாக ஒரு கையால் பிடித்து அசத்தினார். போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரூடி போஸ்மனுக்கு ரூ. 23 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இதற்கு முன் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மிச்செல் கிரிம்ஸ்டோன் என்ற ரசிகர் கேட்ச் பிடித்து ரூ. 23 லட்சம் பரிசு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>