வாகன கட்டுப்பாடு விதிமுறை.. டெல்லியில் இன்று அமலானது.. இரட்டை இலக்க கார்களுக்கு அனுமதி

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வாகனக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டும் இன்று அனுமதிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகமாகி, மக்கள் சாலைகளில் நடமாடவே முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே வாகனப் புகையை கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் ஒற்றை-இரட்டை இலக்க வாகன கட்டுப்பாடு விதியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தினார்.

இதன்படி, ஒற்றை இலக்க தேதிகளில்(1,3,5...) ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களும், இரட்டை இலக்க தேதிகளில்(2,4,6...) இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படும். கார்கள் உள்பட நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் இந்த கட்டுப்பாடு. இருசக்கர வாகனங்களுக்கு கிடையாது. அதே போல், ஞாயிற்றுக்கிழமை எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இந்த விதி தற்போது மூன்றாவது முறையாக இன்று முதல் வரும் 15ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. இதன்படி, இன்று இரட்டை இலக்க பதிவெண் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. ஒற்றை இலக்க கார்கள் வந்தால், அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அரியானா, உ.பி. மாநிலங்களில் இருந்த வந்த ஒற்றை இலக்க கார்கள் இன்று திரும்பிச் செல்ல முடியாமல் தவித்தனர். சிலர் அபராதம் கட்டி விட்டு சென்றனர்.

இதற்கிடையே, அண்டை மாநிலத்தவர்களும் டெல்லியில் இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சைக்கிளில் அலுவலகம் சென்றார்.

கடந்த தீபாவளிக்கு பின், டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் மக்கள் அனைவருமே முகத்தை மூடிக் கொண்டே செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>